

சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக நேற்று காத்திருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்.
குமுளி: சபரிமலையில் மண்டல வழிபாட்டுக்காக கோயில் நடை திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக நவ. 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.
டிச. 16-ம் தேதியுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது. அதன்படி, டிச. 16-ம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி 26 லட்சத்து 81 ஆயிரத்து 460 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
பல்வேறு வனப்பாதை வழியே வந்த பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. அழுதக்கடவு-பம்பை வழியே 46,690 பக்தர்களும், சத்திரம்-சந்நிதானம் வனப்பாதை வழியே 74,473 பேரும் வந்துள்ளனர்.
இதேபோல, பம்பையில் இருந்து 25 லட்சத்து 60 ஆயிரத்து 297 பேர் சபரிமலை சென்றுள்ளனர். அதிகபட்சமாக கடந்த 8-ம் தேதி மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 844 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
வனப்பாதை வழியாக சபரி: மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.