

சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். (கோப்புப் படம்)
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி மே 4-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகே, மின்னணு இயந்திரங்களில் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இத்தேர்தலில் மொத்தம் 8.15 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4.88 கோடி வாக்காளர்கள் (85.10 சதவீதம்) வாக்களித்தனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான 78 சதவீத வாக்குப்பதிவுதான் அதிகபட்சமாக இருந்தது. இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்தது.
அதிகபட்சமாக கரூரில் 93.41 சதவீதமும், வீரபாண்டியில் 93.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 45 தொகுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல், 151 தொகுதிகளில் 80 சதவீதத்துக்கு மேல், 37 தொகுதிகளில் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. பாளையங்கோட்டை தொகுதியில் மட்டுமே வாக்குப்பதிவு 70 சதவீதத்தைவிட குறைவாக (68.97 சதவீதம்) பதிவானது.
இத்தேர்தலில் 75,064 வாக்குச்சாவடிகளில் 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினமும் 2 முறையும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் ஒருமுறையும் நேரில் பார்வையிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிசிடிவி மூலமாகவும் பாதுகாப்பு அறைகள்24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தும் கேமரா காட்சிப் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மே 4-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணி தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்தம் 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80%) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் துறை சார்ந்த அலுவலர்கள், மற்ற தேர்தல் பிரிவுகளில் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் பேர் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும் வாக்களித்துள்ளனர்.
படிவம் 12-டி விண்ணப்பத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர். இதுதவிர, ராணுவத்தினர், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட சேவைத் துறையில் உள்ள 18 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இவர்களது தபால் வாக்குகள் மே 4-ம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும். அந்த வகையில், மொத்தம் 8.15 லட்சம் பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி மே 4-ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் சரியாக காலை 8 மணிக்கு தொடங்கும்.
ஒவ்வொரு மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் அதற்குரிய மேஜைகளில் எண்ணப்படும். இதை மேற்பார்வையிட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிலையில் அதிகாரிகள் தனித்தனியே நியமிக்கப்படுவார்கள். ஒரு மேஜைக்கு 500 வாக்குகள் என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். எனினும், இதன் கடைசி சுற்று வாக்கு எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான் தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.