

ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று பெட்ரோல், டீசலுக்காக காத்திருக்கும் வாகனங்கள்.
திருமலை: ஆந்திர மாநிலத்தில் திடீரென பெட்ரோல், டீசலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து திருமலைக்கு வந்த பக்தர்கள் தங்களின் கார், வேன்களுக்கு போதிய டீசல், பெட்ரோல் கிடைக்காமல் பெரும் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, டீலர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் முழுவதும் திடீரென பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடப்பா, விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள ஆயில் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், மாநிலம் முழுவதும் பெட்ரோல், டீசல் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. ‘இதெல்லாம் உண்மை இல்லை. பெட்ரோல், டீசல் பதுக்கப்படுகிறது. இதன் மூலம் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கலாமென டீலர்கள் முடிவெடுத்து வேண்டுமென்றே மாநிலம் முழுவதும் பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளனர்’ என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் சுமார் 4,150 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இதில் தற்போது 70 சதவீதத்துக்கும் மேலான பங்க்குகளில் ‘நோ ஸ்டாக்’ அறிவிப்பு பலகைகள்தான் காணப்படுகின்றன. அண்டை மாநிலங்களான தெலங்கானா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பிரச்சினை இல்லை. ஆனால் திடீரென ஆந்திராவில் மட்டும் இப்பிரச்சினை தலைதூக்க காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், டீலர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர் என்பதுடன் சுற்றுலா துறையும் பாதிப்படையும் என்பதால் 24 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறை இதுதொடர்பாக மாநிலம் தழுவிய அறிக்கையை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நேற்று மாலை வரையிலும்கூட திருப்பதி, சித்தூர், நெல்லூர், குண்டூர், கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம், கோதாவரி மாவட்டங்கள் என ஆந்திரா முழுவதும் எரிபொருள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
பெட்ரோல், டீசல் வந்ததும் குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகள் முன்பு வாகனங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கி விடுகின்றனர். இதனால் சில மணி நேரங்களிலேயே பெட்ரோல், டீசல் விற்றுத் தீர்ந்து விடுகிறது. திருமலையிலும் இதே நிலைமை உள்ளதால், வெளியூர்களில் இருந்து கார், வேன்களில் வரும் பக்தர்கள் மிகவும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
திருமலையில் உள்ள 2 பெட்ரோல் பங்க்குகளிலும் நேற்று மதியம் முதல் பெட்ரோல், டீசல் இல்லை எனும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டதால் வெகு தூரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. திருமலையில் தொடர்ந்து தங்குவதற்கு அறைகளும் கிடைக்காமல், பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கீழே இறங்கி செல்லவும் முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். எனவே, உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியதால், உலகின் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும், பின்னர் படிப்படியாக நிலைமை சீரடைந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 மற்றும் எல்பிஜி கட்டுப்பாட்டு ஆணை, 2000 ஆகியவற்றின் கீழ், விநியோகத்தைக் கண்காணிக்கவும், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.