

சென்னை: தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வின் எதிரொலியாக சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதி கைப்பந்து மைதானம் உடனடியாக திறக்கப்பட்டது. இதனால் விடுதி மாணவர்கள் உற்சாகமாக கைப்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் அண்ணா சாலையை ஒட்டி எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் அமைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்த விடுதி ரூ.44.5 கோடி செலவில் மின்தூக்கி வசதியுடன் 10 மாடி கட்டிடமாக புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்த விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாணவர்கள், விடுதியில் உணவு நன்றாக இல்லை என்றும் விடுதியின் பின்புறம் உள்ள கைப்பந்து மைதானம் திறக்கப்படாமல் உள்ளது, அதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டனர். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் முதல்வர் உறுதி அளித்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முதல்வரின் திடீர் ஆய்வைத் தொடர்ந்து, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் தரமான உணவு வழங்கும் வகையில் உணவுப் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்க கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் விடுதியின் பின்புறம் உள்ள கைப்பந்து மைதானமும் நேற்று முன்தினம் (சனி) மாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுதி மாணவர்கள் உற்சாகமாக கைப்பந்து விளையாடி மகிழ்ந்தனர். தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது விடுதி மாணவர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.