

படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி என்று, சென்னையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, சென்னையில் கடந்த மே 13-ம் தேதி காலமானார். இந்நிலையில், தமிழியக்கம், டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், அவருக்கு நினைவேந்தல் நெகிழ்வு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம், தமிழ் இணையக்கல்விக் கழக கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழியக்கம் நிறுவனத் தலைவரும், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தியுடன் நெருங்கி பழகியவன் நான். இனிமையான மனிதர். யாரையும் குறை சொல்லமாட்டார். கடிந்து பேசமாட்டார். 32 ஆண்டு காலம் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஆனால், தமிழ் பணியில் இருந்து அவர் ஓய்வு பெறவில்லை. அவருடைய இழப்பு தமிழ் உலகுக்கு பேரிழப்பு. 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ் உயர வேண்டும், தமிழர்களும் உயர வேண்டும் என்று விரும்பியவர்.
தனக்கும், தனது குடும்பத்துக்கும் எந்த சொத்தும் சேர்த்து வைக்காதவர். குடும்பத்துக்கு கல்வியை மட்டும் தான் சேர்த்து வைத்தார். ஓலைச் சுவடிகளை புத்தகமாக மாற்ற பல முயற்சிகளை எடுத்தார். வெளிநாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்று கொடுத்தார். வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் தமிழை பரப்பினார். அவரைப் போன்றவர்கள் இன்றைய தினம் தேவை.
இன்று எல்லோரும் தங்கள் தாய்மொழி வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாய்மொழி மீது பற்றும், அக்கறையும் வைப்பது தவறு அல்ல. ஆனால், மொழியை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவ்வாறு செய்யும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. பேராசிரியர் சுந்தரமூர்த்தி தமிழ் மீது பற்று கொண்டவர்தான்.
ஆனால், அவர் மற்றவர்களை கட்டாயப்படுத்தவில்லை. இன்று மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துகிறது. ஆனால், நமது மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கைதான். பேராசிரியர் சுந்தரமூர்த்தி தமிழ் மொழியும், தமிழர்களும் முன்னேற வேண்டும் என்று பாடுபட்டார்.
தமிழர்கள் பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பங்களை நிறைவேற்ற தமிழியக்கம் தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு விசுவநாதன் பேசினார். சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.ஜெகதீசன் புகழஞ்சலி பேருரை ஆற்றி பேசும்போது, ``தமிழின் போராளியாக இ.சுந்தரமூர்த்தி திகழ்ந்தார்.
தன்னுடைய பதவிகளை தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் சேவை செய்ய பயன்படுத்தினார்” என்று குறிப்பிட்டார். உலக திருக்குறள் இணையக் கல்விக்கழக இயக்குநர் மறைமலை இலக்குவனார், தமிழியக்கம் பொதுச்செயலாளர் அப்துல் காதர், துணை தலைவர் ஜெ.மோகன், பொருளாளர் வே.பதுமனார், மாநிலச் செயலாளர் மு.சுகுமார், மேலாண்மைக் குழு உறுப்பினர் மணிமேகலை கண்ணன், அனைத்துலக தமிழ்க் கல்வி பண்பாட்டு அறிவியல் மேம்பாட்டு இணைய ஒருங்கிணைப்பாளர் ஒப்பிலா மதிவாணன், டாக்டர் உ.வே.சா நூல் நிலைய செயலாளர் தி.சத்தியமூர்த்தி, ஆட்சிக் குழு உறுப்பினர் ராம.குருநாதன் ஆகியோரும் சுந்தரமூர்த்தியின் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.
நிறைவாக, சுந்தரமூர்த்தியின் மூத்த மகன் சு.எழில் நம்பி நெகிழ்வுரை நிகழ்த்தினார். சுந்தரமூர்த்தியின் மனைவி இ.வசந்தி, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.