

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் வைக்கப்பட்டிருந்த 72 அடி உயர விநாயகர் சிலைக்கு நேற்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில், பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.படம்: பிடிஐ
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பந்தல்களில் 37 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலா கலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், இளைஞர் அமைப்பினர், குடியிருப்புவாசிகள் என பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே பந்தல் அமைத்து பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீஸாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 1,562 சிலைகள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 37 ஆயிரம் சிலைகளை வைத்து வழிபட போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை, மாநகராட்சியின் தடை யில்லா சான்றிதழுடனும் விநாயகர் சிலைகள் நிறுவி, வழிபாடுகள் செய்யவும், பின்னர் அவற்றை பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளில் கரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலை அமைப்பதை தவிர்க்க வேண்டும். மத வெறுப்பைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ கோஷமிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நேற்று மாலையே பந்தல்களில் சிலைகள் அமைக்கப்பட்டன. அனைத்து பந்தல்களிலும் தலா ஒரு காவலர், 2 தன்னார்வலர்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களும் பொருத்தி, கண்காணிக்கப்படுகிறது. இந்த சிலைகளுக்கு இன்று முதல் பூஜைகள் செய் யப்பட்டு 19, 20-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் சென்னையில் மட்டும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். உளவுப் பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறும்போது, “தமிழ கம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் பெரிய மற்றும் சிறிய அளவிலான சிலைகள் என மொத்தம் 1.39 லட்சம் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 5,501 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.
சென்னையில் இந்து முன்னணி சார்பில் 20-ம் தேதி ஊர்வலம் நடைபெறும். தென் சென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வள்ளுவர் கோட்டத்தில் இருந்தும், மத்திய சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணியில் இருந்தும், வட சென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் முத்துசாமி பாலத்தில் இருந்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்” என்றார்.