

தவெகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜய் வீசிய ‘பொலிட்டிக்கல் பாம்’ நமுத்து போய்விட்டதாக விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27, 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் விஜய், கொள்கை எதிரி மற்றும் அரசியல் எதிரி யார் என்பதை குறிப்பிட்டார். அப்போது, “தவெகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்” என்று அறிவித்தார். தமிழக அரசியலில் இது ஒரு புதிய முன்னெடுப்பாகப் பார்க்கப்பட்டது. தவெக-வினர் அதை ‘பொலிட்டிக்கல் பாம் ’ என்றெல்லாம் கொண்டாடினர்.
ஏனெனில் பொதுவாகப் பெரிய கட்சிகள் கூட்டணியை ஏற்றுக் கொண்டாலும், ஆட்சியில் பங்கு தர முன்வருவதில்லை. ஆனால், விஜய் வீசிய அந்த பாம் தற்போது நமுத்து போய் விட்டதாக விமர்சனம் கிளம்பியிருக்கிறது.இதுகுறித்து நம்மிடம் அரசியல் நோக்கர்கள் கூறுகையில், “திமுக மற்றும் தேஜ கூட்டணியில் இருக்கும் கட்சிகளைத் தன் பக்கம் ஈர்க்க விஜய் ஒரு மெகா பிளானையே கையில் எடுத்தார். அதன் ஒரு பகுதியாகவே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதிகாரப் பகிர்வு ஆசை காட்டி, பல முக்கியக் கட்சிகளைத் தன் பக்கம் இழுக்கலாம் என அவர் கணக்கு போட்டிருந்தார். ஆனால், ஒரு தேர்தலில் கூட களம் காணாத விஜய்யின் வாக்கு வங்கி எந்தளவிற்கு இருக்கும் என்பது புதிராகவே இருப்பதால், எந்தக் கட்சியும் பனையூர் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என தவெக பெரிதும் நம்பியது. துணை முதல்வர் பதவி, 70 சீட் என ஆப்பர்களை அள்ளி வீசினார்கள் பனையூர் வாசிகள்.
ஆனால் டெல்லி அரசியலை கருத்தில் கொண்டு திமுக-வுடனேயே தொடரலாம் என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து கூட்டணியை உறுதிப்படுத்தியது. புதிய கட்சியை தொடங்கியிருக்கும் பண்ருட்டியார் மட்டுமே தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதனால் விஜய்யின் பொலிட்டிகள் பாம் நமத்து போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து பேசும் தவெக நிர்வாகிகள், “அதிகாரத்தில் பங்கு என்று சொன்னது கூட்டணிக்காக அல்ல, அது மக்களின் அதிகாரத்தை மக்களிடமே ஒப்படைப்பதற்கான ஜனநாயகப் பண்பு. மற்ற கட்சிகள் வராவிட்டாலும், தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு செய்யும் வேலைகள் நடக்கின்றன. நாங்கள்தான் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம்” என்றனர்.