

சென்னை: மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்னாள் துணை பதிவாளர் வி.விஜய ராமுக்கு, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் 6 பேர் என இருந்த நிலையில், அதன் எண்ணிக்கை 8 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, காலியாக இருந்த 3 இடங்களில் 2 இடங்களுக்கு சமீபத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங் ஆகியோர் அரசால் பரிந்துரைக்கப்பட்டு, ஆளுநர் ஆர்.என்,ரவியால் நியமிக்கப்பட்டனர். இருவரும் மார்ச் 6-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், காலியாக இருந்த ஒரு தகவல் ஆணையர் இடத்துக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் துணை பதிவாளராக இருந்து ஓய்வு பெற்ற ஏ.விஜயராம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில், தலைமை தகவல் ஆணையர் ஷகீல் அக்தர் மற்றும் தாமரைக் கண்ணன் உள்ளிட்ட ஆணையர்கள், ஆளுநரின் செயலர் ஆர்.கிர்லோஷ் குமார், மனிதவள மேலாண் மைத் துறை செயலர் சி.சமய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.