

நடிகர் விஜய் | கோப்புப் படம்
சென்னை: கரூர் நெரிசல் வழக்கில், டெல்லியில் முதல்கட்ட விசாரணை முடிந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பிய நிலையில், அடுத்த வாரம் மீண்டும் அவர் ஆஜராகிறார். புதிய தேதி குறித்து சம்மன் அனுப்பி தெரிவிக்கப்படும் என சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ல் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஜன.12-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ கடந்த 6-ம் தேதி சம்மன் அனுப்பியது.
சென்னையில் இருந்து விஜய் நேற்று காலை 7.40 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார், உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்களும் சென்றனர்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் காலை 11.30 மணி அளவில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவரிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஜன.13) விசாரணை தொடர்வதாக இருந்தது. ஆனால், அடுத்த வாரம் ஆஜராவதாக விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற அதிகாரிகள், அடுத்தக்கட்ட விசாரணைக்கான தேதியை இன்னும் ஓரிரு நாட்களில் சம்மன் மூலம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் தங்கியிருந்த தவெக தலைவர் விஜய் இன்று மதியம் 1 மணி அளவில் தனது நிர்வாகிகளுடன் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறியது: “இன்று (ஜன.13) சிபிஐ விசாரணை தொடர வேண்டியிருந்தது. இருப்பினும், பொங்கல் பண்டிகை, ‘ஜனநாயகன்’ திரைப்படப் பணிகள் மற்றும் கட்சி சார்ந்த முக்கிய ஆலோசனைகள் இருப்பதால், வேறொரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ள விடுத்த கோரிக்கையை ஏற்று, அடுத்த வாரம் விஜய் மீண்டும் ஆஜராகி விளக்கம் தர சிபிஐ அறிவுறுத்தியது.
கரூர் சம்பவத்தின்போது 607 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்ததாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால், அப்போதையை சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் 500 காவலர்கள் இருந்ததாகக் கூறுகிறார். ஒரு சாதாரண எண்ணிக்கையிலேயே இவ்வளவு முரண்பாடுகள் இருக்கும்போது, உண்மை நிலை எப்படி இருக்கும்?
தமிழக அரசு மற்றும் காவல் துறையின் தொடர் தவறுகளே கரூர் சம்பவத்துக்குக் காரணம். இதற்கான ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் சமர்ப்பித்துள்ளோம். குறிப்பாக, உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி, கையெழுத்து வாங்கியதாக பல புகார்கள் வந்தது. இது குறித்து விரிவான விசாரணை நடத்துவதாக சிபிஐ அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் அமைதியான முறையில் வெளியாக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். படம் வெளியீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எங்கள் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம். எந்தக் காரணம் கொண்டும் எங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கமாட்டோம்” என்றார் சி.டி.ஆர். நிர்மல்குமார்.