

தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார். சென்னையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தை நேற்று ஆய்வு செய்த அதிகாரிகள். படம்: ம.பிரபு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு, முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ‘மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்’ ஆகிய 2 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் கட்சித் தலைவர் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, முதல்வருக்கு இணையான பாதுகாப்புடன் அலுவலகம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தவெக கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், தவெக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் அனைத்து வெற்றி வேட்பாளர்களும் கையெழுத்திட்டனர். இத்தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள விஜய், சட்ட விதிகளின்படி, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும்.
அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தவும் நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில், மே 7-ம் தேதி (நாளை) பதவியேற்க தயாராக உள்ளதாகவும், 2 வார காலத்துக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநரை இன்று சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். அப்போது, ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார்.
ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில், முதல்வராக விஜய் நாளை பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். அமைச்சரவையில் செங்கோட்டையன், ஜேசிடி. பிரபாகர், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார், மரிய வில்சன், ராஜ்மோகன், அருண்ராஜ், சத்தியபாமா, விஜயலட்சுமி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பதவியேற்பு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி, தவெக வெற்றி வேட்பாளர்கள் அனைவரும் மாமல்லபுரம் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, முதல்வராக நாளை பதவியேற்கும் விஜய், மக்கள் நலன் சார்ந்த 2 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘‘தகுதியுள்ள வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். அதேபோல, நகரப் பேருந்துகள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய வாக்குறுதியை விஜய் அளித்திருந்தார். பதவியேற்றதும், இந்த இரு முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் விஜய் முதல் கையெழுத்திடுவார் என்று தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தலைமைச் செயலர் ஆலோசனை: பதவியேற்பு விழா குறித்து தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில், உள்துறைச் செயலர் மணிவாசன், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.