

நெல்லை: 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரத்தில் பாஜகவுடன் இணைந்து விஜய் நாடகம் ஆடுவதாக, தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இதுகுறித்து, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியது: “கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்துக்கு தமிழக அரசு, விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே தவெக தலைவர் விஜய், ‘சென்னையில்தான் இருக்கிறேன், முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்’ என்று வீரவசனம் பேசினார்.
தற்போது, சிபிஐ வரும் 12-ம் தேதி ஆஜராக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வசனத்தை இப்போது அவர் பயன்படுத்துவாரா அல்லது பாஜகவுடன் இணைந்து நாடகம் ஆடுகிறாரா என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணையை கேட்டாலே நியாயம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு. ஆந்திராவில் ஒரு ரசிகர் இறந்ததற்கு ஒரு நடிகரே கைது செய்யப்பட்டார். தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி இருந்தால் சட்டம் தன் கடமையை செய்திருக்கும்.
மத்திய அரசுதான் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குகிறது. அப்படியிருக்க, படம் (ஜனநாயகன்) வெளியாவதில் சிக்கல் இருப்பது போலவும், அதன்மூலம் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொதிநிலையை உருவாக்குவதற்காகவும் பாஜகவும், விஜய்யும் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியில் பலர், கூட்டணி குறித்து பேசினால், தலைமை நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.