

சென்னை: கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், தேர்தல் பணி கா
ரணமாக 15 நாள் அவகாசம் கேட்டு சிபிஐக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக, டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே ஆஜரான தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அதிகாரிகள் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூர் ஆட்சியர், எஸ்.பி.யிடமும் விசாரணை நடந்தது.
இதற்கிடையே, விஜய் பிரச்சார பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதில் பதிவான காட்சிகள் குறித்து பேருந்து ஓட்டுநர் பரணிதரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு கடந்த ஜன.6-ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்பேரில், ஜன.12-ம் தேதி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து 2-வது முறையாக சம்மன் அனுப்பி ஜன.19-ம் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போதே, குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்படலாம் என்றும், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அதேநேரம், 2-வது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய் இன்று (மார்ச் 10) மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ அலுவலக வட்டாரங்களில், ‘‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் மேலும் சில விவரங்கள் கிடைத்துள்ளன. அதுதொடர்பாக விஜய்யிடம் விசாரித்து, தெளிவுபெற வேண்டிஉள்ளது. அதற்காக அவர் மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’’ எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை சுட்டிக்காட்டி நேரில் ஆஜராக தனக்கு 15 நாள் விலக்கு அளிக்கவேண்டும், சென்னையிலேயே ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் சிபிஐக்கு விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன்? - கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது. அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு இதுதொடர்பான தகவலை சிபிஐ அனுப்பியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்த தகவலை செந்தில் பாலாஜி மறுத்துள்ளார். ‘‘எனது அலுவலகத்துக்க, இ-மெயிலுக்கோ எந்த சம்மனும் வரவில்லை’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.