

திருச்சி: தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் திருத்தம் மற்றும் கூடுதல் விவரம் சேர்க்க 3 பிரமாணப் பத்திரங்களையும், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் ரூ.6 கோடி பிரச்சார வாகனம் தொடர்பாக கூடுதல் விவரம் சேர்க்க ஒரு பிரமாணப் பத்திரத்தையும் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில், வயது மற்றும் வழக்குகள் குறித்து திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.
மேலும், அவர் 2 தொகுதிகளிலும் அளித்த பிரமாணப் பத்திரத்தில், சொத்து விவரப் பகுதியில் தற்போது அவர் பயன்படுத்தி வரும் ரூ.6 கோடி மதிப்பு பிரச்சார வாகனம் குறித்து குறிப்பிடவில்லை.
இதையடுத்து, தவெக வழக்கறிஞர்கள் பிரிவினர் நேற்று முன்தினம் பெரம்பூர் தொகுதியில் 2 வழக்குகள் உள்ள விவரம், வயது திருத்தம் தொடர்பாகவும் பிழைத் திருத்தல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர்.
மேலும் இரு தொகுதிகளிலும் பிரச்சார வாகனத்தை சொத்துவிவரத்தில் கூடுதலாக சேர்க்கக்கோரி கூடுதல் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தனர். இதுகுறித்து தவெகவினர் கூறியதாவது: பொதுவாக விண்ணப்பங்களில் பூர்த்தியடைந்த வயதை தான் குறிப்பிட வேண்டும். ஆனால், பெரம்பூரில் நடப்பு வயதை குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சி கிழக்கில் சரியாக பூர்த்தியடைந்த வயது குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பிரச்சார வாகனம் சேர்க்காத விவரமும் திருச்சி கிழக்கில் மனு தாக்கல் செய்த பிறகே தெரியவந்தது.
இதையடுத்து, பெரம்பூரில் வயது திருத்தம், வழக்குகள் உள்ள விவரம் தொடர்பாக 2 பிழைத் திருத்தல் பிரமாணப் பத்திரம் மற்றும் பிரச்சார வாகனம் தொடர்பாக கூடுதல் பிரமாணப் பத்திரம் என 3 பிரமாணப் பத்திரங்களும், திருச்சி கிழக்கில் பிரச்சார வாகனத்தை சொத்து விவரத்தில் சேர்க்கக் கோரி கூடுதலாக ஒரு பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்யும்நாள் இன்றுடன் (ஏப்.6) முடிவடைவதால், அதுவரை திருத்தங்கள் செய்யலாம். இதனால், வேட்பு மனுவுக்கு எந்த பிரச்சினையும் வராது.
அதேபோல, வேட்பு மனுபரிசீலனையின்போது ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது தொடர்பாக தேர்தல் அலுவலர்களிடம் விளக்கம் தந்தால் போதுமானது. இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து திருச்சி கிழக்கு தேர்தல் அலுவலர் முத்து முருகேசபாண்டியனிடம் கேட்டபோது, “பிரச்சார வாகனம் தொடர்பாக கூடுதல் பிரமாணப் பத்திரம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.