

“இந்தத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், திமுக கூட்டணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பிஹார் தேர்தலில் வாக்கு திருட்டு, தேர்தல் விதிமீறல்கள் நடந்துள்ளன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் கைகோத்துள்ளன. எஸ்ஐஆர் பணியை வருவாய் துறை அலுவலர்கள் புறக்கணித்து இருப்பதும், பழைய ஓய்வூதியம் வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ போராட்டம் அறிவித்துள்ளதும் நியாயமானதுதான். இதேபோல, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்துவிட்டு சென்றார்கள். ஆனால், இதுவரை நிதி கொடுக்கவில்லை. அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதை அரசியல் காழ்ப்புணர்வாக முதல்வர் எடுத்துக்கொள்ள மாட்டார். பிஹாரைப் போன்று தமிழகத்தில் வாக்கு திருட்டு நடத்த முடியாது. தவெக தலைவர் விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கூற முடியாது. ஆனால், அவரால் திமுக கூட்டணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.