தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அறிவிக்க வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாய்மாமன் சீராக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் சுமார் 4,787 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. இந்நிலையில், தமிழக அரசு கடந்த 12-ம் தேதி 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இக்கடைகள் மூடப்பட்ட பிறகு, கடை அருகே உள்ள சந்துகளில் (சந்துக் கடைகளில்) கள்ளச்சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் தடையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

கிராம சபை கூட்டங்களில் மதுபானக் கடையை மூடச் சொல்லி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், கடந்த கால அரசுகள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தினசரி சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் இந்த விற்பனை இரட்டிப்பாக அதிகரிக்கிறது.

மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எனவே, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசு மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுக் குடிப்பகங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இது தமிழக பெண்களுக்கு தமிழக அரசு அளிக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும்.

இதைவிட பெரிய பரிசு என்றால் அது பூரண மதுவிலக்கே. தமிழக பெண்களுக்கு உண்மையான தாய்மாமன் சீராக அமையும். எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று இந்தச் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் </p></div>
ஆளுநர், பாஜக, திமுக ஒன்றாக இருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in