ஆளுநர், பாஜக, திமுக ஒன்றாக இருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

நிர்மல் குமார்

நிர்மல் குமார்

Updated on
2 min read

சென்னை: “பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் மிக நெருக்கமான உறவு உள்ளது. அமலாக்கத் துறை சார்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்கள், அந்த கோப்புகள் கடந்த வாரம் கையெழுத்தானது. ஆனால், ஆளுநர் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அப்படியானால் யார் யாருடன் இணக்கமாக இருக்கிறார்கள்? ஆளுநரும், பாஜகவும், திமுகவும் ஒன்றாக இருக்கிறார்கள்” என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் உரைக்கு பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் மிக நெருக்கமான உறவு உள்ளது. அமலாக்கத் துறை சார்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டிருந்தார்கள், அந்த கோப்புகள் கடந்த வாரம் கையெழுத்தானது. ஆனால், ஆளுநர் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அப்படியானால் யார் யாருக்கு இணக்கமாக இருக்கிறார்கள். ஆளுநரும், பாஜகவும், திமுகவும் ஒன்றாக இருக்கிறார்கள்.

பாஜகவின் மறைமுக முகமாக திமுக இருக்கிறது. திமுகவை பின்னாலிருந்து இயக்குவதே பாஜகதான். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான கோப்புகள் மீது ஆளுநர் கையெழுத்து போடாதது ஏன்?. இதற்கு பாஜகவும், திமுகவும் பதில் சொல்ல வேண்டும்.

சட்டப்பேரவையில் முதல்வர் பேச வேண்டும் என திமுக உறுப்பினர்கள் பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். துணை முதல்வராக இருந்த உதயநிதிக்கு சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து கூட தெரியவில்லை. இன்று ஆளுநர் உரை, எனவே ஆளுநர் மட்டும் தான் பேசுவார். பதிலுரையின் போதுதான் முதல்வர் பேசுவார்.

தமிழகத்தில் ஏற்படும் மின் வெட்டுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் மின்வெட்டு இருந்தது, அதனை எவ்வளவு நேரத்தில் சரிசெய்தோம் என்ற விவரங்களை அடுத்தநாள் தினமும் வெளியிடுகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் சம்பவங்கள் நடக்கும்போது, அனைத்தும் மறைக்கப்பட்டதையே பார்த்தோம். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஒரு வாரம் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகப்பேர் சிறுமி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

கடந்த ஆட்சியில் குற்றச் சம்பவங்களை மறைக்கும் வேலையை செய்தார்கள். எங்கும் ஒழுங்காக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இப்போது யார் குற்றம் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கண்டிப்பாக சொல்லியுள்ளார். தவறுகள் நடந்த எல்லா இடங்களிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களை தடுக்க அதிகாரிகளை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அரசைப் போல இந்த அரசு எதையும் மூடி மறைக்கவில்லை.

பெண்கள் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சிங்கப்பெண் திட்டத்தை விரிவாக்குவதே முதல்வரின் நோக்கம். சமூக ரீதியாக நடக்கும் குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கும். தனிப்பட்ட முறையில் நடக்கும் குற்றங்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கப்பெண் படைக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது, கூடுதல் அதிகாரமும் வழங்கப்படும்.

தமிழக அரசின் நிதி நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. மின் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டவை எவ்வளவு கடனில் உள்ளது என பார்த்தோம். இதனை மீட்டெடுக்கும் வேலையை செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு லாபத்தில் இயங்கிய மின் துறை, போக்குவரத்துத் துறை இப்போது நலிவடைந்துள்ளது. ஆனால் கூடுதல் வருவாயை பெருக்க கடந்த அரசு எதையும் செய்யவில்லை. ரூ.30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் மட்டுமே திருடிவிட்டது என முன்னாள் நிதியமைச்சர் ஒருவரின் ஆடியோ வெளியானது.

லஞ்ச, லாவண்யத்தை குறைத்தாலே நம்மால் போதுமான அளவு நிதியை சேமிக்க முடியும். நிதி ஆதாரத்தை பெருக்க முதல்வர் பாடுபட்டு வருகிறார். இப்போது இருக்கும் பிரச்சினை என்னவென்று மக்களுக்கு சொல்லிவிட்டோம். மின்சாரத் துறை சார்பாக அடுத்த வாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.

கூடுதல் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒரு அரசு பல்கலைக்கழகமாவது லாபத்தில் இயங்குகிறதா?. திமுக முன்னாள் அமைச்சர்கள் பல்கலைக்கழகங்கள் வைத்துள்ளனர். அவை அனைத்தும் 5 நட்சத்திர ஹோட்டல் அளவு வளர்ந்துள்ளன. ஆனால், அரசின் பல்கலைக்கழகங்கள் என்ன நிலையில் உள்ளது?. இதுதான் அவர்களின் சாதனை.

அரசுத்துறை நிறுவனங்கள் வளரவேண்டும். வருவாயைப் பெருக்க புதிய நிறுவனங்கள் தொடங்க வேண்டும். ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து ஆய்வு செய்து முதல்வர் முடிவை அறிவிப்பார்.

கடந்த ஆட்சியில் நடந்த மிகப்பெரிய தவறு எஃப்எல்2 பார் எனப்படும் மனமகிழ் மன்றங்கள். டாஸ்மாக் எண்ணிக்கையில் 20 முதல் 30 சதவீதம் வரை எஃப்எல்2 பார்களை திறந்தார்கள். விதிமுறைகளுக்கு மாறாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 முதல் 4 மடங்கு எஃப்எல்2 பார்கள் திறக்கப்பட்டன. இதில் விதிமீறல்கள் நடந்ததா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>நிர்மல் குமார்</p></div>
‘தவெக - பாஜகவுக்கு இணக்கமான தொடர்பு’ - ஆளுநர் உரை மீது உதயநிதி சந்தேகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in