

சென்னை: ரூ.4.58 கோடியில் புதுப்பிக்கப்பட்ட கன்னிமாரா நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் முதல் பொது நூலகமான கன்னிமாரா பொது நூலகம், 1896-ம் ஆண்டு டிச. 5-ம் தேதி சென்னை எழும்பூரில் தொடங்கப்பட்டது.
தற்போது, 130-வது ஆண்டை எட்டியுள்ள, இந்த நூலகம் புத்தக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் பயனுள்ளதாக திகழ்கிறது. இங்கு 9.5 லட்சம் நூல்களும், 1.5 லட்சம் உறுப்பினர்களும் உள்ளனர்.
இங்கு 1553-ம் ஆண்டு வெளியான நூல் முதல் மிகவும் பழமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கன்னிமாரா பொது நூலகம் ரூ.4.58 கோடியில் நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், நவீன மாநாட்டு கூடம் உட்பட பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சிந்தாதிரிப்பேட்டையில் நூற்றாண்டு விழா காணும் (1926-2026) கோஷன் நூலகம் பாரம்பரிய முறையில் ரூ.2.36 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இவ்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்தநிகழ்வுகளில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், பொது நூலகத்துறை இயக்குநர் ச.ஜெயந்தி, தொடக்கக்கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் பங்கேற்றனர்.