தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் எழும்பூர், மயிலாப்பூர் பகுதிகளில் கட்டப்பட்ட 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
சென்னை எழும்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வேம்புலி அம்மன் கோயில் திட்டப்பகுதியில் 1976-ம் ஆண்டு 295 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 144 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தன.
இதையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் அதே பகுதியில் 9 தளங்களுடன் ரூ.32.63 கோடி செலவில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதேபோல் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் ரூ.57.07 கோடி செலவில் 14 தளங்களுடன் 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுரஅடி பரப்பளவுடன் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் ரூ.89.70 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய 584 அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஹாரிங்டன் சாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்து, குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் துறைமுகம் பி.ஆர்.என்.கார்டனில் ரூ.85.68 கோடியில் கட்டப்பட்டு வரும் 501 அடுக்குமாடி குடியிருப்புகள், எல்லீஸ்புரத்தில் ரூ.15.29 கோடியில் கட்டப்பட்டு வரும் 85 அடுக்குமாடி குடியிருப்புகள், ராயபுரம் செட்டித் தோட்டத்தில் ரூ.45.36 கோடியில் கட்டப்பட்டு வரும் 243 அடுக்குமாடி குடியிருப்புகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் சிஎம்டிஏ சார்பில் ரூ.132 கோடியில் கட்டப்பட்டு வரும் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, த.வேலு, இ.பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
