புதுடெல்லி: உலகம் முழுவதும் உள்ள சீனர்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய வீரர்கள் 20 பேரும் சீன வீரர்கள் 40 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து சீனாவுக்கான விமானப் போக்குவரத்து, சீன குடிமக்களுக்கு விசா போன்றவை ரத்து செய்யப்பட்டன. அத்துடன் சீனாவில் பல செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய - சீன உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதன்படி, எல்லையில் உள்ள படைகளை திரும்ப பெறுவதென கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவின் கசன் நகரில் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பலனாக இரு நாடுகளும் நேரடி விமானப் போக்குவரத்தை கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கின. மேலும், திபெத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சீனா அனுமதி வழங்கியது. அடுத்தக்கட்டமாக கடந்த ஜூலை மாதம் சீனாவில் உள்ள சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி சீன தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சு, ஹாங்காங் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் இந்திய சுற்றுலா விசா பெற அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள சீனர்கள், அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் சுற்றுலா விசா பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை. ஏற்கெனவே அரிய வகை தனிமங்களை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.