

ராஜ்குமார்
சென்னை: கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடிய ரேஷன் அரிசி ஏற்றிச் சென்ற லாரி மோதி இருவர் உயிரிழந்த சம்பவம், சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள், குடோனில் சேமிக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி, நேற்று காலை சென்னை பேசின் பாலத்திலிருந்து மின்ட் நோக்கி செல்லும் சாலையில் உள்ள மூலக்கொத்தளம் சந்திப்பு வழியாக, ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆவடி அடுத்த பாலவேடு இந்திரா நகரை சேர்ந்த கவுதமன், அம்பத்தூர் ஜீவரத்தினம் நகரை சேர்ந்த முரளிதரன் (56) ஆகிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வியாசர்பாடி கென்னடி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (63), தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (45) ஆகிய இருவர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்து, இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்தவர்களும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் கோயம்பேட்டைச் சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவரை கைது செய்தனர். முன்னதாக, அவர் மீது பொது மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.