

தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தியில் தவெக தலைவர் விஜய்யின் காரை பெண் நிர்வாகி ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக-வில் ஏற்கெனவே 120 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இருப்பினும் தூத்துக்குடி உட்பட சில மாவட்ட தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதையொட்டி மீதமுள்ள மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் தலைமை வகித்து புதிய மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிப்பாணைகளை வழங்கினார்.
இதையொட்டி கட்சி நிர்வாகிகள் காலை முதலே பனையூரில் திரளாக குவிந்தனர். இதற்கிடையே தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அந்தப் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்த்து காத்திருந்த பெண் நிர்வாகியான அஜிதா ஆக்னல், பட்டியலில் தன் பெயர் இல்லாததால் அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்து விஜய்யை சந்தித்து பேச முற்பட்டார்.
ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கட்சியின் நீண்ட காலம் உழைத்தவர் களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என நிர்வாகி அஜிதா கண்ணீர் மல்க தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்த விஜய்யின் காரை ஆதரவாளர்களுடன் வழிமறித்து அவரிடம் பேச முற்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். எனினும் கட்சி அலுவலகம் முன்பு அஜிதா தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்னர், கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விஜய்யிடம் பேசிக்கொள்ளலாம் எனச் சொல்லி அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நிர்மல்குமார் கூறியதாவது:
கட்சியில் பொறுப்புகள் வழங்கும் போது ஒரு சில இடங்களில் அதிருப்தி வருவது இயல்புதான். இது எல்லா கட்சிகளிலும் இருக்கக் கூடியது தான். கடந்த வாரம் கூட திமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் முதல்வரை பார்க்க முடியாததால், அறிவாலயத்தின் வெளியே தனது உறுப்பினர் அட்டையை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்.
இவ்வாறு கட்சிகளில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனவருத்தம் இருக்கும். திமுக-வை விட தவெக-வில் ஜனநாயகம் அதிகமாக உள்ளது. அதிகளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். யார், யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டுமோ, கட்சி தலைவர் முடிவெடுத்து வழங்கி வருகிறார். கட்சிக்காக உழைத்தவர்கள் யாரையும் விஜய் கைவிடமாட்டார். அனைவரையும் அரவணைப்பார் என்றார்.