

படங்கள்: எஸ்.குரு பிரசாத்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறையாக வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தேர்தலில் தோல்வியடைந்தது திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எடப்பாடி தொகுதியில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். காரைக்குடியில் போட்டியிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
நடிப்பில் இருந்து அரசியலுக்கு மாறி, தவெக கட்சியைத் தொடங்கிய விஜய், களம்கண்ட முதல் தேர்தலிலேயே எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்.23-ம் தேதி நடந்தது. இதில் திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் இடையே நான்குமுனைப் போட்டி நிலவியது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்து வந்த தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1967 முதல், திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. 1967-ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த இருகட்சிகளுக்கும் மாற்றாக உருவான பாமக, மதிமுக, தேமுதிக, மநீம போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட முடியாமல், இந்த இரு கட்சிகளுடன்தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன.
அதனால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தனிப்பெருங்கட்சியாக இக்கட்சிகளால் வரமுடியவில்லை. சீமானின் நாதக யாருடனும் கூட்டணி அமைக்காவிட்டாலும், இதுவரை ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாத நிலையில்தான் உள்ளது.
இந்தச் சூழலில், திரைத் துறையில் உச்ச நட்சத்திரமாக, புகழின் உச்சியில் இருக்கும் விஜய் கடந்த 2024 பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
2024-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போதிலும், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான் என் இலக்கு என்று அப்போதே அறிவித்தார் விஜய். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தொடர்ந்து கூறிவந்த அவர், அவ்வாறே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார்.
“இவரும், மற்ற கட்சிகளைப்போல காணாமல் போவார். அடுத்த தேர்தலில் திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். விஜய் ரசிகர்களின் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உள்ளாகின.
இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், அக்கட்சிக்கும், தலைவர் விஜய்க்கும் பெரிதும் பின்னடைவாக அமைந்தது. அதன்பிறகு, வீட்டுக்குள்ளேயே பல நாட்கள் முடங்கி இருந்தார் விஜய்.
ஆனால், குறுகிய காலத்திலேயே மீண்டெழுந்த விஜய், அதிகாரத் தடைகளை எல்லாம் தகர்த்து, மீண்டும் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு இளைஞர்களும், பெண்களும் அலைகடலென புறப்பட்டு வந்தனர்.
பெரும்பாலும் பல தொகுதிகளிலும் சாமானியர்களையே வேட்பாளராக அறிவித்தார் விஜய். பிரதானக் கட்சிகள் ஒரு ஓட்டுக்கு ரூ.1,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கியதாக கூறப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர்கள் பலரும் பிரச்சாரத்துக்குகூட செலவிட முடியாதவர்களாக இருந்தனர். வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தவெகவுக்கு சராசரியாக 20-25 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றன.
தனிப்பெரும் கட்சியான தவெக
இந்த சூழலில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கம் முதலே தவெகவினர் முன்னிலை பெற்று வந்தனர். 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகவும் தவெக உருவெடுத்துள்ளது.
இதை தொடர்ந்து, தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ளார். பெரும்பாலும் எளிய பின்னணி கொண்ட தவெக வேட்பாளர்கள், பாரம்பரியமிக்க திராவிடக் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளனர்.
சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததை அடுத்து, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட தவெக தலைவர் விஜய்.
தவெகவின் விசில் புரட்சி
இதற்கிடையே, தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டதும், அக்கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. விஜய் தொடங்கி,
அக்கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் பிரச்சாரக் கூட்டங்களின்போது உற்சாகத்துடன் ‘விசில்’ ஊதியது, அக்கட்சிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. தவெகவின் இந்த விசில் புரட்சியால், அசுர பலத்துடன் ஆண்டு வந்த திமுக வீழ்த்தப்பட்டுள்ளது.
ரூ.8 ஆயிரம் கூப்பன், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது. 3 மாத மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 உடன் கோடைகால சிறப்பு உதவித் தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5 ஆயிரத்தை தேர்தலுக்கு முன்பாக மகளிரின் வங்கிக் கணக்கில் திமுக அரசு வரவு வைத்தது.
அதேபோல, அதிமுக சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றைத் தாண்டி இந்த இருகட்சிகளையும் தவெக வீழ்த்தியுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்ற நிலையில், தற்போதைய தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.
கடந்த 2011-ல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர் என்று திமுகவினரால் விமர்சிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவிடம் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
அது மட்டுமின்றி, கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் உட்பட திமுக அமைச்சர்கள் பலரும் தவெக வேட்பாளர்களிடம் தோல்வியை சந்தித்தது, திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 1967-க்கு பிறகு, அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
அதிமுகவின் 54 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை அடுத்தடுத்து இரு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோற்றதே இல்லை ஆனால், இப்போது விஜய் அலையில் சிக்கி, 2-வது முறையாக ஆட்சிக்கு வராமல் போனதுடன், 3-ம் இடத்துக்கு செல்லும் அளவுக்கு அதிமுக நிலைகுலைந்திருப்பது, தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாதக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
அனைத்து தேர்தல்கள் போலவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாதக யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துக் களம்கண்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு அளித்து, நான்குமுனைப் போட்டியை எதிர்கொண்டது. தான் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் கிடையாது என்று துணிச்சலாக வாக்குறுதிகளையும் வெளியிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
எனினும், தமிழகம் முழுவதும் சுழன்றடித்த ‘விஜய் அலை’யில் நாதக வேட்பாளர்கள் அனைவரும் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி, சீமான் உட்பட அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
களம் கண்ட முதல் தேர்தலிலேயே தவெக அமோக வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்சிக் கொடியுடனும், ‘விசில்’ ஊதியபடியும் அக்கட்சியினர் நேற்று இரவு வரை பைக்குகளில் சுற்றியபடி இருந்தனர்.
மெஜாரிட்டி ஆட்சிக்குத் தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை - விஜய்யின் அடுத்த நகர்வு என்ன?
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், கட்சிகளிடம் ஆதரவு கோருவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது தவெக முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அதிமுகவின் ஆதரவைக் கோருவது. மற்றொன்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை கோருவது. அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஒருவேளை அதிமுக ஆதரவு அளித்தால் தவெக மிக எளிதாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால், பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த சூழலில், தற்போது பழனிசாமி ஆதரவு அளிப்பாரா என்பது தெரியவில்லை.
மற்றொருபுறம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் விஜய் திட்டமிட்டு வருகிறார்.
இதற்கிடையே, தவெகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தொலைபேசி வாயிலாக விஜய்யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
காங்கிரஸ் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. பாமக தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் வராததால், திருமாவளவன் தலைமையிலான விசிகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் விஜய் தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது.
தேர்தலுக்கு முன்பு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்று விஜய் கூறிவந்தார். அந்த எதிர்பார்ப்புடன் விஜய்க்கு ஆதரவு அளிக்கப்போவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: தவெகவின் ஈர்க்கக்கடிய செயல்திறனுக்கு எனது பாராட்டுகள். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி. தமிழக முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனுக்கான உதவிகளை மத்திய அரசு தொடர்ந்து செய்யும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: தமிழக தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள். இளைஞர்களின் குரல் ஓங்கி ஓலித்திருப்பதை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. இதை உதாசீனப்படுத்திவிட முடியாது.
நடிகர் ரஜினிகாந்த்: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மநீம தலைவர் கமல்ஹாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் தமிழிசை, அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.