

திருச்செங்கோட்டில் நடைபெற்ற தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பேசினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தவெக பிரச்சார பொதுச் செயலாளரான அருண் ராஜ், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவார் எனவும், அவரை மூத்த தலைவர்களான செங்கோட்டையன் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்துவார்கள் எனவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், திருச்செங்கோட்டில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “ஒவ்வொரு தொகுதியிலும் விஜய்யின் அறிவுறுத்தலின்படி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி, திருச்செங்கோட்டில் நடைபெறுகிறது.
தவெகவின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மட்டும் தான் அறிவிப்பார். ஊடகவியலாளர்கள் தயவு செய்து எதையாவது ஒன்றை போட்டுவிடாதீர்கள். வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தவெக தலைவர் விஜய் முதல்வராக வருவார். எந்த கட்சியாவது எங்களைப்போல் மாநாடு நடத்த முடியுமா.
மற்ற கட்சிகள் எல்லாம் ரூ.200, ரூ.300 கொடுத்து தான் கூட்டம் கூட்ட வேண்டும். யாருக்காவது தைரியம் இருந்தால் பணம் கொடுக்காமல் கூட்டம் போடுங்கள், அனைவரும் வாருங்கள் என சொல்லுங்கள் வருவார்களா என பார்ப்போம். ஆனால் தவெக தலைவர் விஜய் வந்தால் கூட்டம் தானாக வந்துவிடும்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் தான் வேட்பாளர். விஜய் சினிமாத்துறையில் உச்சத்தை விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என வந்துள்ளார்.
தமிழகத்தில் புயல், மழை என எந்த பாதிப்பு வந்தாலும் தவெக பாடுபடும். தமிழகம் இக்கட்டான சூழலில் உள்ளது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து
ஏமாற்றி விட்டார்கள் என மக்கள் நினைக்கின்றனர். அதன் வெளிப்பாடு தான் இங்கு கூடியுள்ள கூட்டம். மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் மூடுவிழா கண்டுவிட்டது. கூடிய விரைவில் தவெகவுக்கு அருமையான சின்னம் வழங்கப்பட உள்ளது. சின்னம் வந்த 15 நிமிடத்தில் அது உலகப் புகழ் பெறும்.” என்றார்.
கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘‘வரும்சட்டப்பேரவை தேர்தலில் தவெக வரலாறு படைக்கும். கூட்டணியை வரவேற்கிறோம். ஆனால் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களை மட்டுமே நாங்கள் ஏற்று கொள்வோம்.
ஒரு இயக்கம் நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்கு நல்ல தலைமை வேண்டும். அது விஜய்யால் மட்டுமே முடியும். கடந்த 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்திலும், 9 முறை எம்எல்ஏ-வாகவும் பணியாற்றி இருக்கிறேன். சமுதாய முன்னேற்றத்துக்கு விஜய் முக்கிய பங்காக இருப்பார்’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தவெக பிரச்சார பொதுச் செயலாளரான அருண் ராஜ், மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன், சதீஸ், பிரதீப் உள்பட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.