

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்று வருவதால் பிரதான கட்சி வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதோடு, பிரதான கட்சிகளின் முகவர்களும் வாடிய முகத்துடன் காணப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தவெக வேட்பாளர்கள் 7 தொகுதியிலும் களமிறக்கப்பட்டனர்.
பிரதான கட்சிகளைப் போல வாக்காளர்களை கவனிக்க முடியாவிட்டாலும் தவெகவினர் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது முதல் சுற்றிலும் அதைத்தொடர்ந்தும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர். ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஜெகதீஸ்வரி தொடர்ந்து முன்னிலையிலும், விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளருக்கு ஈடுகொடுக்கும் வகையில் தவெக வேட்பாளர் செல்வம் 2-வது இடத்திலும், திருச்சுழி தொகுதியில் தவெக வேட்பாளர் சமயன் முதலிடத்தையும், அருப்புக்கோட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் கார்த்திக்குமார் 2-வது இடத்திலும் இருந்து வருகின்றனர்.
தொடர்ந்து திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு சம ஈடு கொடுக்கும் வகையில் தவெக வேட்பாளர்கள் வாக்கு பெற்றுள்ளது பிரதான கட்சி வேட்பாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது. தவெக எதிர்பாராத வகையில் வாக்கு வாங்குவதைப் பார்த்த பிரதான கட்சி முகவர்களும் நேற்று வாடிய முகத்தோடு காணப்பட்டனர்.