
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றார்.
அவர் மட்டுமல்லாது தவெகவின் அறியப்பட்ட முகங்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், ராஜ் மோகன் எனப் பலரும் வாகை சூடினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பேரதிர்ச்சியையும், அதிமுகவுக்கும் சற்றும் குறைவில்லாத அதிர்ச்சியையும் கடத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் தவெக தடம் பதித்துள்ளது. அதுவும் அதன் கூட்டணிக் கட்சியும் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன.
விஜய் அரசியல் மேடைகளில் விசில் புரட்சியை ஏற்படுத்துங்கள் என்று கோரியதுபோலவே இப்போது தமிழகமெங்கும் பரவலாக தவெக வெற்றி பெற்றிருக்கிறது. தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்திருந்தாலும் தனித்து ஆட்சியமைக்கும் மெஜாரிட்டியை பெறாததால் தனது முதல் சவாலை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இவ்வாறு இன்னமும் பரபரப்புகள் மிச்சம் மீதி இருப்பதுபோல் இருக்க மேற்கு வங்கம் பாஜகவை வரவேற்றுள்ளது. மூன்று முறை ஆட்சி செய்த மம்தா பானர்ஜி வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.
கேரளாவிலும் ஆளும் எல்டிஎஃப் விடைபெறுகிறது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் ஆட்சியைப் பிடிக்கிறது. அசாமில் என்டிஏ கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது.
திமுக, அதிமுக கூட்டணி நிலவரம்: இந்த சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும் கூட 2-வது இடத்தை திமுக தக்கவைத்துக் கொண்டிருப்பது ஆறுதல்.
அந்த வகையில், “திமுக இதுவரை சிறப்பான ஆளுங்கட்சியாக இருந்ததுபோல், இனி சிறப்பான எதிர்க்கட்சியாக இருக்கும்,” என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் அதிமுக தனித்து 34 இடங்களில் வெற்றி பெற்றதோடு 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவுக்கு 27 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தும் கூட ஓரிடத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. அதே கதைதான் அமமுகவுக்கும். பாமக 2 இடங்களில் வெற்றி 2 இடங்களில் முன்னிலை என்றிருக்கிறது.
எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, ஆற்காடு தொகுதியில் எஸ்.எம்.சுகுமார், பாலக்கோடு தொகுதியில் கே.பி.அன்பழகன், ஏற்காடு தொகுதியில் உஷாராணி, ஓமலூர் தொகுதியில் ஆர்.மணி, நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், நெய்வேலி தொகுதியில் ஆர்.ராஜேந்திரன், சங்கரன்கோவில் தொகுதியில் டாக்டர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் அங்கேயும் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ என அதிர்ச்சித் தோல்விக் கணக்குகள் இல்லாமல் இல்லை.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை பொறுத்தவரை தருமபுரியில் சவுமியா அன்புமணி, ஜெயங்கொண்டம் தொகுதியில் ஜி.வைத்திலிங்கம் வெற்றி பெற்றனர்.