

சென்னை: குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரை, இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க திருவல்லிக்கேணி போலீசாருக்கு அனுமதியளித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக எம்எல்ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணன், சேது ராஜ், ராஜசேகரன் ஆகிய மூன்று பேரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், மூன்று பேரையும் இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, திருவல்லிக்கேணி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் ஜூலை 17-ம் தேதி மாலை, மூவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மூவரையும் துன்புறுத்தக் கூடாது; அச்சுறுத்தக் கூடாது எனவும், அவர்கள், தங்கள் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.