

சென்னை: “2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் நிச்சயமாக முதல்வராக வருவார். புதுச்சேரியிலும், தவெக ஆட்சி அமையும்” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்துக்கு காலை முதல் ஏராளமான தொண்டர்கள் வருகை புரிந்தனர். இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இப்பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் நிச்சயமாக முதல்வராக வருவார்.
புதுச்சேரியிலும், தவெக ஆட்சி அமையும். புதுவை காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தவெக பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை 31 நிபந்தனைகள் விதித்தது. எத்தனை நிபந்தனைகள் விதித்தாலும் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும். இன்று வேலை நாள், இருந்தாலும் விஜயை காண அனைவரும் வந்திருக்கிறார்கள்.
72 நாட்களுக்கு பிறகு பொதுக்கூட்டத்துக்கு விஜய் வந்திருக்கிறார். தமிழகத்தில் நம்மை எங்கும் விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். விஜய் கூறியதைப் போல காற்றை ஒன்றும் செய்ய முடியாது.
அதுபோல, தலைவரை (விஜயை) யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நான் உச்சத்தில் இருக்கும் போதே மக்களுக்கு தொண்டு செய்வேன் என கூறிய ஒரே தலைவர் விஜய் தான். புதுச்சேரி மக்களும், தமிழக மக்களும் விஜய் மீது அதிக பாசத்தை காட்டுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் தான் உள்ளன. 2026-ல் புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைய உழைப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.