

டிடிவி தினகரன் | கோப்புப் படம்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமித் ஷா என்னை அழைக்க மாட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமமுக-வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள். முதல்வர் வேட்பாளராக பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் வரை அதில் அமமுக இடம்பெற வாய்ப்பே இல்லை.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான் அமமுகவின் நிலைப்பாடு.இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அமமுக உறுதியாக உள்ளது. அதில் அமமுக-வின் பங்கு உறுதியாக இருக்கும். அதைத்தான் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முக்கிய உறுதிமொழியாக ஏற்றிருக்கிறோம். கூட்டணிக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னை கண்டிப்பாக அழைக்க மாட்டார்.
தமிழகத்தின் பொது நல்லிணக்கத்துக்கும், அமைதிக்கும் இடையூறு வரும் விதமாக எந்த ஒரு அரசியல் கட்சியோ அமைப்போ செயல்படக்கூடாது. தமிழகத்தில் சாதி, மதங்களை கடந்து எல்லோரும் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ, திருவிழாக்களின் பெயராலோ எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தமிழக மக்கள் இது போன்ற அரசியலை உறுதியாக ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.