

கோவை / திருப்பூர்: திமுக மகளிரணி மேற்கு மண்டல மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (டிச. 29) நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி, 2,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் திமுக மகளிரணி மாநாட்டில் மேற்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த 1.50 லட்சம் பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அங்கிருந்து சின்னியம்பாளையத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை 4 மணிக்கு கார் மூலம் பல்லடம் செல்கிறார். மாநாடு முடிந்த பின்னர் இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்து, சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
இதேபோல, துணை முதல்வர் உதயநிதி இன்று மதியம் 1 மணிக்கு கோவை வந்து, அங்கிருந்து பல்லடம் செல்கிறார். மாநாடு முடிந்த பின்னர் கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவர், நாளை ஆர்.எஸ்.புரத்தில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர், கோவையிலிருந்து ஈரோட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர், எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாநாடு நடக்கும் இடத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் தலைமையில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
13 வகையான உணவுகள்... திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் மாநாட்டில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சு.முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
மகளிர் மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் 13 வகையான உணவு வகைகளுடன் மதிய விருந்து வழங்கப்படுகிறது. மாநாட்டின் நிறைவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.