

சென்னை: காலநிலை மாற்ற சவால்களை எதிர்த்து தமிழகம் போராடி வெல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் பேசியதாவது:
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்க்கிறோம். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், டிட்வா புயலின்போது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தமிழகத்தை காப்பாற்றியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே பேரிடர் தடுப்பு, தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கி விட்டோம்.
காலநிலை மாற்ற ஆட்சிமன்றக் குழு, பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்று நாம் முன்கூட்டியே நிறைய செய்து வருகிறோம். இதனால் நாட்டுக்கே வழிகாட்டும் நிலையில் தமிழகம் உள்ளது.
கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, பட்ஜெட்டில் ரூ.24 கோடி மதிப்பில், காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கூல் ரூஃபிங் திட்டத்தை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான செயல்திட்டத்தில் சேர்த்துள்ளோம். இதன்படி இத்திட்டத்தை 297 பசுமைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் செயல்படுத்த உள்ளோம்.
மேலும் கடலோர வாழ்விடங்களை, இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறுசீரமைக்கும் திட்டத்தின்கீழ், தொடர்ச்சியாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்தில் 4,500 ஹெக்டேர் பரப்பளவாக இருந்த அலையாத்திக் காடுகள், 9 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்திருக்கிறது. இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், பெண் குழந்தைகளும்தான் என ஆய்வுகளில் உறுதியாகி இருக்கிறது.
அதனால், பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் விதத்தில் அரசின் திட்டங்களும், காலநிலை தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். தமிழகத்தின் மொத்த கிரீன்ஹவுஸ் காஸ் எமிஷன் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 லிருந்து 19 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
சென்னை போன்ற மெட்ரோ நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவதே சிறந்த வழி. அதை ஊக்குவிக்கதான் எம்டிசி மூலம் முதற்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம். மேலும் 600 பேருந்துகளை விரைவில் கொண்டுவர உள்ளாம். இதனால், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு குறையும். புவிவெப்பமயமாதல் ‘நெட் ஜீரோ’ இலக்கை அடைய பணியாற்றி இருக்கிறோம். இதற்காக மாநில அரசு நிதியில் ரூ.500 கோடி வரை ஒதுக்கியுள்ளோம்.
நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக அரசு கேட்டதில் வெறும் 17 சதவீதத்தை தான் மத்திய அரசு விடுவித்திருக்கிறது. நாம் கேட்டது ரூ.24,679 கோடி; வழங்கியதோ வெறும் ரூ.4,1136 கோடி மட்டும்தான். எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழகம் போராடி, வென்றிருக்கிறது. அதுபோல், இந்த காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து தமிழகம் போராடும், வெல்லும். இவ்வாறு பேசினார்.