

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், 50 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை (இவிஎம்) சொந்தமாக வாங்கியுள்ளது. அவை நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், அவற்றில் 1374 வார்டுகள், 138 நகராட்சிகள், அவற்றில் 3843 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் 7621 வார்டுகள் உள்ளன.
மாநிலத்தில் சென்னை தவிர உள்ள 37 மாவட்டங்களில் 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 4671 ஊராட்சி ஒன்றிய வார்டுகள்,12525 ஊராட்சிகளில், 12525 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள், 99327 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன.
ஆக மொத்தம் நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் 1,31,816 பதவிகளுக்கு நேரடி தேர்தலும், 14,673 பதவிகளுக்கு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சிகளுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊரகப் பகுதிகளில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் என 4 பேரை தேர்வு செய்ய வேண்டி இருப்பதால், 4 வாக்குகளை அளிக்க வேண்டியுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் வாங்கியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.
அதனால், இதுநாள் வரை வாக்குச்சீட்டு மூலமாகவே அங்கு உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்திலும் இவிஎம்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேவையான இவிஎம்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது சொந்தமாக இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, புதிதாக வாங்கப்பட்ட இயந்திரங்கள் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட நகரப்புற உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி கூறியதாவது: மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே 2500 இவிஎம்கள் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தன.
இப்போது கூடுதலாக 50 ஆயிரம் இவிஎம்களை, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தயாரித்து வழங்கும் அதே பெல் (BEL) நிறுவனத்திடம் வாங்கி இருக்கிறோம்.
தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் படிப்படியாக 100 சதவீதம், சொந்த இவிஎம்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இவிஎம்கள் படிப்படியாக வாங்கப்பட்டு வருகின்றன.
இவற்றை 15 ஆண்டுகள் தோராயமாக 3 தேர்தல்களுக்கு பயன்படுத்த முடியும். தற்போது வந்துள்ள இவிஎம்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.