

சென்னை: தமிழக மின்சாரத் துறை வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள புகழ்பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலர் மங்கத் ராம் சர்மாவும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரும் (கல்வி திட்டமிடல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை மேலாண் இயக்குநர் (நிதி) விஷுமஹாஜன், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர் எஸ்.அனீஷ் சேகர், தமிழ்நாடுமின் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர் ம.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோசே நிறுவனம், ரூ.100 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சார, மின்னணு இணைப்பிகள் உற்பத்தித் திட்டம் அமைப்பதற்கும் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
புதிய ஆலைக்கு அடிக்கல்
காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அசோக் லேலண்ட் நிறுவனம் மின்கலன் தொகுப்பு உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது.
தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய ஆலை அமைப்பதற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.