

புதுடெல்லி/ சென்னை: மேகேதாட்டு அணை திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்த நிலையில், அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் இந்த மறுஆய்வு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த 2025 நவ.13-ம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, ‘காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி, காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் செயலாகும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
‘மேகேதாட்டு அணை திட்டத்தால் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்க இத்திட்டம் தடையாக இருக்காது’ என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கை, காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது.
அந்த அமைப்புகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வரைவு அறிக்கை ஏற்கப்படும் என்று மத்திய நீர் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. தவிர, காவிரி வழக்கின் தீர்ப்பின்படி தண்ணீரை திறக்க மறுத்தால் கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும்.
மேலும், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரலாம்.
தற்போதைய சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த மனு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு ஏற்க முடியாது” என்று கூறி, தமிழக அரசின் மனுவை நிராகரித்தனர்.
இந்நிலையில், இந்த உத்தரவு காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகவும், மேகேதாட்டு அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், வி.எம்.பஞ்சோலி அமர்வு நாளை (ஏப்.15) விசாரிக்க உள்ளது.
இதனிடையே மறுஆய்வு மனுக்கள் வழக்கமாக நீதிபதிகள் அறையில் விசாரிக்கப்படும். ஆனால், இந்த மனுவை நீதிமன்றத்தில் விசாரிக்க கோரி தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு சார்பில் நேற்று முறையிடப்பட்டுள்ளது.