விளிம்பு நிலையில் இருக்கும் 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி ரூ.2,000

வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
விளிம்பு நிலையில் இருக்கும் 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி ரூ.2,000
Updated on
2 min read

சென்னை: சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்த திருநங்கையர்கள் என 37.79 லட்சம் பயனாளிகளுக்கு சிறப்பு நிதியாக தலா ரூ.2,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. தேர்தலுக்கான முழு ஏற்பாடுகளையும் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக அரசு ஏற்கெனவே 1.31 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு 1.06 கோடி மகளிரை பயனாளிகளாக கொண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு முகாம்கள் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை 1.13 கோடியாக உயர்த்தப்பட்டது.

சமீபத்தில் இந்த எண் ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்தது. மாதந்தோறும் 15-ம் தேதி இந்தத் தொகை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பிப்.13-ம் தேதி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் கோடைகால தொகுப்பு ரூ.2,000 என ரூ.5,000 தொகை 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக செலுத்தப்பட்டது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இத்திட்டத்துக்கு இந்த நிதியாண்டின் இறுதி துணை பட்ஜெட்டில் ரூ.3,913.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது:

கோரிக்கை நிறைவேற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்குக் கோடை கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதிய உதவித்தொகை பெற்று வரும் முதியோர்கள், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.

நலிவு நிலையைப் போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2,000 மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர்கள், கைம்பெண்கள் என மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.3.200, 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3,500, பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 இன்று (நேற்று) காலை வழங்கி இருக்கிறோம்.

அது மட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.8,000 வீதம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2 ஆதார விலை என ரூ.8.53 கோடி நிதி வழங்கப்படுகிறது.

இந்தத் தருணத்தில் மீண்டும் ஒரு முறை சூளுரைக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது முதியோர்கள் மற்றும் கைம்பெண் களுக்கு மாதம் ரூ.1,200-ம், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், 75 சதவீதத்துக்கு மேல் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.2,000-ம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு: முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன்,‘‘மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.2,000 சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், புதிய அரசு பதவியேற்றவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

விளிம்பு நிலையில் இருக்கும் 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி ரூ.2,000
மாநிலங்களுக்கு உரிய அதிகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in