

சென்னை: மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்குகர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது முதல்கட்ட அறிக்கையை தமிழக அரசிடம் அளித்தது. இந்நிலையில், முதல்வர்மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதம்: மத்திய – மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடகாவின் முழு ஆதரவைத்தெரிவிக்கிறேன்.
கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கைஅல்ல, அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு. பல ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் அதிகாரம் மத்திய அரசிடம் குவிக்கப்படுவது, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையைச் சீர்குலைத்துள்ளது.
மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற, அவற்றுக்கு உரிய அதிகாரமும், நிதி சுதந்திரமும் இருக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் ‘மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்' போன்ற ஒரு வலுவான தளத்தை மத்திய அரசு அமைத்துத் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாக பங்களிக்ககர்நாடகா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நன்றி: இதற்கிடையே சித்தராமையா வுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘‘மத்திய - மாநில உறவு குறித்து ஆராய, தமிழக அரசு அமைத்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதற்பாகம் குறித்த தங்களது வரவேற்புக்கு நன்றி. கூட்டாட்சிக் கருத்தியலைப் புதுப்பிக்கும் முயற்சி கூட்டு முயற்சியாக அமைய வேண்டும் எனத் தாங்கள் அங்கீகரித்திருப்பதை மிகவும் பாராட்டுகிறேன்.
‘பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் ஒற்றுமையை ஒற்றைத்தன்மையால் நிலைக்கச் செய்ய முடியாது, அரசியலமைப் பின் வழியிலான நம்பகத்தன்மைமூலமே அதை செய்ய இயலும்’ எனத் தாங்கள் தெரிவித்திருக்கும் கருத்து மிகச் சரியானது’’ என தெரிவித்துள்ளார்.