சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 47 ஆண்டுகளாக கோயில் செயல் அலுவலரே தக்காராக நியமிக்கப்பட்டு வருவதால், அரசு அதிகாரியாக உள்ள செயல் அலுவலரை தக்காராக நியமிக்க கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, செயல் அலுவலர்கள் கோயிலின் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மத நடவடிக்கைகளில் தலையிட செயல் அலுவலர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அறங்காவலர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி.பாலசுப்ரமணியம், அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. நியமன நடைமுறைகளை முடிக்க 6 மாதங்கள் ஆகும் என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 6 மாதங்களுக்குள் அறங்காவலர் நியமன நடைமுறைகளை முடிக்கும்படி உத்தரவிட்டனர்.
மேலும், கோயில் செயல் அலுவலர்கள் மத நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என்றும், கோயிலின் மரபு, பழக்க வழக்கங்கள் தெரிந்தவர்கள் மட்டுமே அத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.