

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர்.
சென்னை: மாநிலத்தின் நிதிநிலையை சீரமைத்து, அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு போதைப் பொருள் தடுப்புப் படை அமைக்கப்படும். புதிய தொழில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக காலை 9.52 மணிக்கு பேரவை வளாகத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், செயலர் சாந்தி ஆகியோர் பூங்கொத்து வழங்கி அவரை வரவேற்று, பேரவைக்குள் அழைத்துச் சென்றனர்.
அவருக்கு முன்பாகவே முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் பேரவைக்குள் வந்து அமர்ந்திருந்தனர். காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்துடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. பின்னர், ஆளுநர் அர்லேகர் தனது உரையை தொடங்கினார். தமிழில் ‘வணக்கம்’ என்று கூறிவிட்டு, ஆங்கிலத்தில் 37 நிமிடங்கள் உரையை வாசித்தார்.
ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மாற்றம் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே மக்களின் பேராதரவுடன் முதல்வர் விஜய் ஆட்சி அமைத்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசியலில் அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு பெரும் புரட்சியை முதல்வர் விஜய் ஏற்படுத்தியுள்ளார்.
நிர்வாக அமைப்பில் மலிந்துள்ள ஊழலைக் களைந்து, நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. அதற்கேற்ப அனைத்து துறைசார்ந்த கொள்முதல்கள், டெண்டர்கள் ஒளிவுமறைவின்றி, கடுமையான கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். கடந்த காலங்களில் நிலவிய முறையற்ற நிதிப் பரிமாற்றங்கள், இடைத் தரகர்களின் தலையீடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். கீழடி, ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்ன அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
விரிவான நிலையான சுற்றுலா கொள்கை வகுக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், தென் மாநில நதிகளை இணைக்கவும், ஒலிம்பிக் உயர்திறன் மையங்கள் அமைக்கவும், வறுமையற்ற தமிழகம் உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்.
தேசியக் கல்விக் கொள்கையை அரசு கடுமையாக எதிர்க்கிறது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும். புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு போதைப் பொருள் தடுப்புப் படை அமைக்கப்படும்.
தமிழகத்துக்கான நிதிப் பகிர்வில் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். தமிழகத்துக்கான நியாயமான நிதிப் பகிர்வை மத்திய அரசிடம் இருந்து பெறுவது உறுதி செய்யப்படும். உயர்கல்வித் துறையில் அடிப்படை சீர்திருத்தம் கொண்டுவந்து உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நிதிப் பகிர்வை பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ‘வெற்றித் தமிழகம்’ - தொலைநோக்குத் திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலத்தின் நிதிநிலையை சீரமைத்து வருங்காலத்தில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இவ்வாறு ஆளுநர் உரையாற்றினார்.
ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்:
கீழடிக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
போதையை ஒழிக்க சிறப்புப் படை
தொழில் வளர்ச்சிக்கு புதிய கொள்கை
உரையில் அவர் பேசும்போது, ‘வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள்’ உள்ளிட்ட சிலரது பெயர்களை தவறாக உச்சரித்தார். அதற்காக பேரவையில் மன்னிப்பும் கோரினார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளை குறிப்பிட்டு உரையை ஆளுநர் நிறைவு செய்தார். பின்னர், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் வாசித்தார். கூட்டத்தின் நிறைவாக, மீண்டும் தேசியகீதம் இசைக்கப்பட்டு, 11.10 மணிக்கு கூட்டம் முடிவடைந்தது.
தமிழக சட்டப்பேரவை மரபின்படி ஆளுநர் உரையின்போது கூட்டம் தொடங்கும் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசியகீதமும் இசைக்கப்படும். வரலாற்றில் முதல்முறையாக நேற்று நிகழ்ச்சியின் தொடக்கம், நிறைவு என 2 முறை தேசியகீதம் இசைக்கப்பட்டது பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித் தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.