

சென்னை: ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவை போல் தமிழகத்தில் உள்ள ஓட்டல்களில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு தமிழகம் முழுவதும் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
அடுத்ததாக டாஸ்மாக் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள ஓட்டல்களில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா போல் ரெஸ்டோ பார்கள் செயல்பட அனுமதி வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது ரெஸ்டோ பார்களுக்கு தனியான உரிமம் (லைசன்ஸ்) வழங்கப்படவில்லை. இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் எஃப்.எல்.1 உரிமம் டாஸ்மாக் கடைகளுக்கும், எஃப்.எல்-2 உரிமம் கிளப்பிற்கும், எஃப்.எல்- 3 நட்சத்திர தனியார் விடுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பல இடங்களில் எஃப்.எல்-2 உரிமம் பெற்ற சில தனியார் கிளப்புகள், உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்தாலும், பொதுமக்களுக்கும் உணவுடன் சேர்த்து மதுபானம் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடும்.
இதை ஒழுங்குபடுத்தபொழுதுபோக்கு சங்க உரிமத்தின் கீழ் இவ்வகை சேவைகளை அனுமதிப்பதற்குப் பதிலாக, ரெஸ்டோ பார்களுக்கென தனி உரிமம் வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ரெஸ்டோ பார்கள் அமைக்க எஃப்.எல்.பி உரிமம் பெற வேண்டும். அதேபோல், எஃப்.எல்.ஏ.ஏ மற்றும் எஃப்.எல்.ஏ என உரிமங்கள் உள்ளன. ஏற்கனவே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக ரெஸ்டோ பார்கள் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக இயங்கி வருகிறது.
சமீபத்தில் சென்னை நகரில் எஃப்.எல்-2 உரிமம் பெற்ற கிளப்புகளுக்கான ஆண்டு சிறப்பு கட்டணம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதேபோல், புதிய ரெஸ்டோ பார் உரிமத்திற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், டாஸ்மாக் கடை களுடன் இணைந்துள்ள பார்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, அதற்குப் பதிலாக உரிமம் பெற்ற ரெஸ்டோ பார்களை ஊக்கு விக்கும் வாய்ப்பையும் அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.