

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் புரியில் தொடங்கிய ஜெகந்நாதர் ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்; 120-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புரி கோயிலின் ஜெகந்நாதர், பலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் ரத யாத்திரையை காண கிராண்ட் ரோடு பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, ஒருவர் உயிரிழந்ததும், 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கூட்ட நெரிசலை அடுத்து சிறப்பு மீட்புக் குழு, காவல் துறை மற்றும் அவசரக் கால மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கி, நெரிசல் மிகுந்த பகுதியில் இருந்து பக்தர்களை வெளியேற்றினர். மேலும், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக புரி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவ மையங்களுக்கு கொண்டு சென்றனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, மூச்சுத் திணறல் காரணமாக ஒரு பக்தர் மயக்கமடைந்து புரி மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க கிராண்ட் ரோடு பகுதியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அவசரக் கால மீட்பு முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.
ஒடிசா மாநிலம் புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று (ஜூலை 16) தொடங்கியதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவுக்காக தரை, கடல், ஆகாயம் ஆகிய மூன்று மார்க்கங்களிலும் கண்காணிக்கும் விரிவான பாதுகாப்புத் திட்டத்தை ஒடிசா காவல் துறை வகுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தரைவழியாகக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வான்வழியாகக் கண்காணிக்க அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு கருவிகளைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. கடல்வழிப் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் ஒடிசா கடல்சார் போலீஸார் இணைந்து கப்பல்கள் மூலம் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 9 நாட்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரை திருவிழாவுக்கு, மொத்தம் 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.