

பாஜக அலுவலகம்
சென்னை: தேர்தலுக்கு முன்பு கமிஷன் தொகையை பெற வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக சாலை பணிகளுக்கான டெண்டர் விடப்படுவதாக திமுக அரசு மீது தமிழக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டது போல, இந்தியாவின் மிக ஊழல் மலிந்த அரசாக திமுக திகழ்கிறது. ஒவ்வொரு திட்டத்திலும் 20 சதவீதம் கமிஷன் என்ற "கமிஷன் ராஜ்ஜியம்" தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
தற்போது தேர்தல் நிதிக்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தை திமுக அரசு பகிரங்கமாகச் சுரண்டி வருகிறது. கடந்த ஜன.14-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 6-ன் படி, 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில், முன்கூட்டியே ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 80 சாலைத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 312.48 கி.மீ சாலைப் பணிகளுக்காக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி நடுப்பகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், அதற்கு முன்பே கமிஷன் தொகையைப் பெறுவதற்காக அவசர அவசரமாக இந்த டெண்டர்கள் விடப்படுகின்றன. தற்போது நிதி கைவசம் இல்லை. ஆனால், தேர்தல் செலவுக்காகத் தனது ஆதரவு ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக இந்த டெண்டர்களை திமுக அரசு ஒதுக்குகிறது.
தேர்தல் அறிவிப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக மாநில அரசுகள் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதையோ அல்லது டெண்டர் விடுவதையோ தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
திமுகவின் இந்த ஊழல் பிடி தளரும் காலம் வந்துவிட்டது. முறையற்ற வகையில் விடப்படும் அனைத்து டெண்டர்களும் வரும் தேர்தலில் அமையும் புதிய அரசால் ரத்து செய்யப்படும். தமிழக மக்களுக்கு நேர்மையான ஆட்சி தேவை, கொள்ளைக்காரர்களின் ஆட்சி அல்ல” என்று அதில் கூறப்பட்டுள்ளது.