கும்பகோணம் அருகே சேமிப்பு கிடங்கில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் சேதம்

கும்பகோணம் அருகே சேமிப்பு கிடங்கில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் சேதம்
Updated on
2 min read

கும்பகோணம்: பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் பெய்த கனமழையில் நனைந்து 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமாகின.

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 3 வட்டங்களில் 47 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க பட்டீஸ்வரத்தில் 15 ஏக்கரில் 1 அட்டிகைக்கு 3150 நெல் மூட்டைகள் வீதம் 480 அட்டிகைகளுடன் கூடிய திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு கடந்த பிப். 2-ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

இந்த நிலையில், அண்மைக் காலமாக கும்பகோணம் பகுதியில் மழை பெய்து வருகிறது, நேற்று 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சேமிப்பு கிடங்கு அட்டிகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சரிந்து மழை நீரில் நனைந்து, ஏராளமான நெல் மூட்டைகளில் நாற்றுகள் முளைத்துள்ளன.

இதனையடுத்து, பட்டீஸ்வரத்தில் உள்ள திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பணியாளர்கள் கூறியது: “கடந்த சம்பா, தாளடி விளைச்சல் அதிகமானதால், பட்டீஸ்வரத்தில் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு, தினந்தோறும் தார்ப்பாய் மூலம் மாலையில் மூடப்பட்டு, காலையில் அகற்றப்படும். இதற்காக அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நெல் வரத்து அதிகமானதால் நெல் அடுக்கப்பட்டிருக்கும் அட்டிகையை மூட தார்ப்பாய் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், மயில்கள் இரைக்காக, மூடி உள்ள நெல் மூட்டைகளை கொத்தும் போது, பெரும்பாலான தார்ப்பாய்கள் முழுவதும் சேதமடைந்து விட்டன. இதில் நெல் மூட்டைகளும் சேதமாகி விட்டன.

தார்ப்பாய் தட்டுப்பாடு, மயிலினால் தார்ப்பாய் மற்றும் நெல் மூட்டைகள் சேதமானதால், அண்மைக் காலமாக பெய்த மழையில் ஆங்காங்கே சில நெல் மூட்டைகள் நனைந்தன. இந்நிலையில் நேற்று பலத்த மழை பெய்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முழுவதும் சரிந்து மழை நீரில் நனைந்தன. இதே போல் பெரும்பாலான நெல் மூட்டைகள் தொடர்ந்து பெய்த மழையில் நனைந்ததால், நாற்றுகள் முளைத்து விட்டன. அட்டிகையை சூழ்ந்து மழை நீர் தேங்கி இருப்பதால்,தொடர்ந்து மழை பெய்தால், அங்குள்ள நெல் மூட்டைகள் இன்னும் அதிகளவில் பாதிக்கப்படும்.

தற்போது அங்கு 215 அட்டிகையில் 6,77,250 நெல் மூட்டைகள் உள்ளதில், இதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுவதும் சேதமாகி உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் தரமான தார்ப்பாய் வழங்க வேண்டும். மேலும், மயில்கள் சேதமாக்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு, இதற்கு ஏற்படும் இழப்பீட்டை பணியாளர்களிடம் பிடித்தம் செய்யக்கூடாது” எனத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் மெய்கண்டமூர்த்தி கூறியது: ”பட்டீஸ்வரம் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையினால் 150 நெல் மூட்டைகள் மட்டும் சேதமாயின. அந்தபகுதியை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், கோட்டாட்சியர் திருமலை உள்ளிட்டோர் பார்வையிட்டோம். சேதமடைந்த நெல் மூட்டைகள் உடனே திருநாகேஸ்வரம் நவீன நெல் அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே சேமிப்பு கிடங்கில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் சேதம்
“பெண்கள் பாதுகாப்பை பறிப்பதுதான் மாற்றமா முதல்வர் விஜய்?” - நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in