“சிறுபான்மை ஜாதிகளை ‘குழிதோண்டி புதைத்த’ தேர்தல் இது” - நாராயணன் திருப்பதி காட்டம்

“சிறுபான்மை ஜாதிகளை ‘குழிதோண்டி புதைத்த’ தேர்தல் இது” - நாராயணன் திருப்பதி காட்டம்
Updated on
2 min read

சென்னை: சிறுபான்மை ஜாதிகளை குழிதோண்டி புதைத்த ஜாதிய தேர்தலாக நடந்து முடிந்த தேர்தல் இருந்ததாக பாஜகவின் மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜாதி, பணம், ஆள் பலம் தான் முக்கிய காரணிகளாக இருந்தன. பணபலம் இல்லாமல் ஆள் பலம் இல்லை; ஜாதி பலம் இல்லாமல் பணபலம் இல்லை. மொத்தத்தில் ஜாதியை ஒழித்து விட்டோம் என்று கூவுகின்ற தமிழகத்தில் ஜாதி இல்லையேல் அரசியலே இல்லை, ஜாதி இல்லையேல் அதிகாரமே இல்லை.

ஜாதி வெறிபிடித்த, ஜாதி அரசியல் உள்ள, ஜாதி வன்மம் மிக்க, எங்கும் ஜாதி, எதிலும் ஜாதி என்று பரவியிருக்கின்ற மாநிலம் தமிழ் நாடு என்றால் அதில் சந்தேகமேயில்லை. ஜாதியே அரசியல், ஜாதியே பணம், ஜாதியே வாழ்க்கை, ஜாதியே அதிகாரம் என்பது தான் 'திராவிட மாடல்'.

தொழில் சார்ந்து வாழ்க்கை முறையென வடிவமைக்கப்பட்டிருந்த ஜாதிய கட்டமைப்பை தகர்த்தெறிந்து தங்களின் அதிகாரத்திற்காக, சொத்துக்குவிப்பிற்காக, குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக, சுயநலத்துக்காக, ஓட்டுக்காக, அந்த ஓட்டு தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் பணத்திற்காக 'ஜாதிய அரசியல்' என்று கட்டமைக்கப்பட்டது தான் 'திராவிட மாடல்'.

ஒரு புறம் ஜாதி என்பது ஒவ்வொரு சமுதாயத்தின் வாழ்க்கை முறை என்பதையும், ஜாதி ரீதியாக கட்டமைக்கப்பட்டது தான் சமுதாயம் என்பதையும் மறைத்து அல்லது செய்யும் தொழிலின் மூலம் உருவானது தான் ஜாதி என்பதை ஏற்க மறுத்து, கலப்பு மணம் தான் ஜாதியை ஒழிக்கும் மந்திரக்கோல் என்ற மாயையை/ பொய்யை பரப்பி, சாலைகளில் உள்ள பெரியோர்களின் பெயரில் இருந்த ஜாதிப் பெயரை நீக்கி, அந்தப் பெரியோர்களின் ஜாதிகளின் பெருமையை குலைக்க சதி செய்து, ஜாதியை ஒழித்து விட்டதாக மார்தட்டிக் கொண்டு, மறுபுறம் கட்சியில் ஜாதிக்கொரு பதவி, ஆட்சியில் ஜாதி ரீதியான பொறுப்புகள், அரசியலில் வாக்குகளை பெறுவதற்கு ஜாதி ரீதியாக கட்சிகளை உருவாக்கி, அரசு நிர்வாகத்தில் ஜாதிய ரீதியாக நியமனங்களை செய்து, மக்களிடையே ஜாதி சங்கங்களை தூண்டி விட்டு குளிர்காயும் ஜாதி அரசியலை தான் 'திராவிட மாடல்' 60 வருடங்களாக செய்து கொண்டிருக்கிறது.

சிறுபான்மை மதத்தை அல்ல, சிறுபான்மை ஜாதிகளை குழிதோண்டி புதைத்த ஜாதிய தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல். ராமானுஜரின் சமத்துவ சீர்திருத்தத்தை, பாரதியார் வலியுறுத்திய 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற தொலைநோக்குப் பார்வையை, ராஜாஜி செயல்படுத்திய ஜாதி தீண்டாமை ஒழிப்பை, அம்பேத்கர் முன்னெடுத்த சமத்துவத்தை மறந்து, மறைத்து ஜாதிய அரசியலை புகுத்திய 'திராவிட மாடல்' அரசியல் தான் 2026 சட்டமன்ற தேர்தல். ஜாதி, பணம் இவை இரண்டும் தான் இனி தமிழக அரசியல் பாதை!” என தெரிவித்துள்ளார்.

“சிறுபான்மை ஜாதிகளை ‘குழிதோண்டி புதைத்த’ தேர்தல் இது” - நாராயணன் திருப்பதி காட்டம்
“ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கை கூடாது” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in