

சென்னை: “திரையுலகின் திசைவழிப் போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிராஜா. அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்” இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு பெரும் துயரமளிக்கிறது. தவிர்க்க இயலாத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நான் புது டெல்லியில் இருப்பதால், அண்ணன் பாரதிராஜா திருவுடலுக்கு அஞ்சலி செலுத்த இயலாத நிலையில் உள்ளேன். அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன். என்மீது பேரன்பைச் செலுத்தியவர்.
'என்னைவிட என் தந்தை தான் உங்களை மிகவும் நேசிப்பவர்' என்று அவரது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையிடம் அறிமுகப்படுத்தினார். 'நீயும் என் பிள்ளை தான் தம்பி' என்று இயக்குநரின் தந்தை என்னிடத்தில் நெகிழ்வுடன் கூறிய அந்த நிகழ்வு இன்னும் எனது நெஞ்சில் நிழலாடுகிறது.
திரையுலகின் திசைவழி போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிரஜா. அரை நூற்றாண்டுக்கு முன், 1970-களில் திரைக்கலையை அதீத ஒப்பனைகளிலிருந்து மீட்டு, எளிய மக்களின்இயல்பான வாழ்வியலை புதிய மரபாக நிலைநாட்டியவர். சாதியத்துக்கு எதிரான புரட்சிகர சிந்தனைகளை விதைக்கும் 'வேதம்புதிது' என்னும் திரைக் காவியத்தைத் தமிழுலகுக்குக் கொடையளித்தவர். அப்படத்தில் இனமுரசு சத்யராஜைக் கொண்டு சாதி ஆதிக்கத்துக்கு எதிராக கர்ஜனை செய்தவர்.
"பாலுத்தேவர் என்பதில், 'பாலு' ஒங்க பேரு; 'தேவர்' என்ன நீங்க படிச்சு வாங்குன பட்டமா ?" - என்று அவர் ஒரு குழந்தையின் மூலம் எழுப்பிய கேள்வி, மனசாட்சியுள்ள ஒவ்வொருவரின் நெஞ்சையும் உலுக்கியது. அப்படத்தின் கடைசி காட்சியில், 'இளம்பிஞ்சுகளையாவது சுதந்திரமாக வாழவிடுங்கள்'- என்று அறிவுறுத்தும் வகையில் மூத்தோரிடமிருந்து இளையோரைப் பிரித்துக் காட்டுவது இன்றும் கண்ணிலேயே நிற்கிறது.
'இளந் தலைமுறையினரின் நெஞ்சில் சாதி நஞ்சைப் பாய்ச்ச வேண்டாம்' என்கிற அவரது கருத்து, தமிழ்நாட்டில் அம்பேத்கர் இயக்கங்கள் வலுப்பெறாத காலத்தில் தெறித்துத் திரையுலகை அதிரவைத்த ஒன்றாகும். 'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை' என்னும் சிறுத்தைகளின் கருத்தை எமது மேடைகளில் வழிமொழிந்தவர்.
அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சார்ந்தோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.