

திருமாவளவன் | கோப்புப் படம்
திருவாரூர்: நாகர்கோவிலில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நாகர்கோவிலில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலை வழங்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும். தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும், இது மக்களின் கட்டளை. இந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
சேலத்திலும், மதுரையிலும் எங்களுடைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருப்பது போன்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனாலும், சமூக விரோத சக்திகள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது கவலை அளிக்கிறது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படாது என அரசு ஏற்கெனவே முடிவு எடுத்துள்ளது. அதே நிலைப்பாட்டில் இந்த புதிய அரசும் இருக்கும் என நான் நம்புகிறேன். விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். 14-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். ஏற்கெனவே இருந்த அரசு, முதல்வரே வேந்தராக இருக்கும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பி உள்ளது. அந்த நிலைப்பாட்டில் தற்போதைய அரசு உறுதியாக இருக்க வேண்டும். புதிய துணைவேந்தர்கள் நியமிக்க வேண்டிய நடைமுறைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.