

சென்னை: அரசின் தீவிர முயற்சியால் தமிழகத்தின் பொருளாதாரம், கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 31.19 லட்சம் கோடிகளாக உயர்ந்து 16 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதிய தொழில் கொள்கைகளால் வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை நாம் எட்டுவோம் என்ற இலக்குடன் செயல்படும், முதல்வரின் முன்னெடுப்புகளால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பான உச்சத்தை தொட்டுள்ளது.
எனவே, மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GSDP) 2023-24-ம் ஆண்டுகளில் 26.88 லட்சம் கோடியாக இருந்த தமிழக பொருளாதாரம், கடந்த ஆண்டு 2024-25-ம் நிதியாண்டில் ரூ.31.19 லட்சம் கோடியாக உயர்ந்து 16 சதவீத வளர்ச்சியை நாம் இன்று எட்டியுள்ளோம். இது அரசின் சிறப்பான கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த உயர் வளர்ச்சி விகிதம் என்பது கடந்த 3 ஆண்டுகளாகவே தொடர்ந்து இருக்கிறது. 2021-22-ல் 15.91 சதவீதம், 2022-23-ல் 14.47 சதவீதம், 2023-24-ல் 13.34 சதவீதமாக இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று அது 16 சதவீதத்தை தொட்டிருப்பது திமுக ஆட்சியின் வெற்றிக்கு எடுத்துக்காட்டு.
இதில், உற்பத்தித் துறை பெரும் பங்களிப்பை செய்துள்ளது. இதற்கு காரணம், தமிழகத்தில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், 27.7 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானம் அதிகளவில் உதவி செய்துள்ளது. சேவைத்துறை 53 சதவீதம் பங்களித்துள்ளது.
குறிப்பாக, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நாம் எட்ட ஏற்றுமதியில் முன்னேற வேண்டும். அதேபோல் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டாளர் சந்திப்பின் மூலமும் ரூ.11 லட்சத்து 40,731 கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டு 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், 34.08 லட்சம் பேருக்கு நேரடி, மறைமுக வேலை கிடைத்துள்ளது.
தமிழகத்தின் ஏற்றுமதி 2024-25-ல் 14.65 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. அதேபோல், உயர்
கல்வியில் இந்திய சராசரி 28.4 சதவீதமாக உள்ளபோது தமிழகம் 47 சதவீதமாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள்ளாக 2025-26-ல் கட்டுப்படுத்தப்படும். தமிழகத்தின் நிதி மேலாண்மை, மொத்த வளர்ச்சி,தொழில் வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் கிடைத்துள்ள நற்சான்று தான் இந்த 16 சதவீத வளர்ச்சியாகும். இவ்வாறு கூறினார்.