

சிவகாசி: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என மத்திய அரசு மீது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
மத்திய அரசைக் கண்டித்து, திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் திமுக செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தற்போது ஏற்பட்டுள்ள காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சிலிண்டர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பை மத்தியில் உள்ள மோடி அரசு தட்டிக் கழிக்கிறது. வளைகுடா நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், பாஜக அரசு செயல்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. கடந்த காலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.417 ஆக இருந்த சிலிண்டர் விலை, தற்போது ஆயிரம் ரூபாயை நெருக்கி உயர்ந்துள்ளது.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா போட்டதைவிட பெரிய குண்டை மத்திய பாஜக அரசு நாட்டு மக்கள் மீது போட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடிமையாக ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய கச்சா எண்ணெய்யை வாங்க மறுத்ததுதான் பிரச்சினைக்கு காரணம்.
பாஜக நாட்டின் இறையாண்மையைக் காக்க, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. உணவகங்கள் மூடப்பட்டுள்ளன, பெட்ரோல் பங்க்கில் மக்கள் கேன்களுடன் வரிசையில் நிற்கின்றனர், வீடுகளுக்கு 45 நாட்களுக்குப் பின்னர்தான் சிலிண்டரை பதிவு செய்வோம் எனக் கூறுகின்றனர்.
ஆனால், தட்டுப்பாடு இல்லை. நானே காஸ் ஏஜென்சி வைத்திருக்கிறேன் எனக் கூறி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ஏஜென்ஸிக்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார். கப்பல் வருகிறது என்கிறார்கள். ஆனால், எரிவாயு வரவில்லை.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், அனைவருக்கும் கல்வி, நூறு நாள் வேலை என அனைத்துத் திட்டங்களுக்கான நிதியையும் நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டையும், மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடர்வது உறுதி. இவ்வாறு அமைச்சர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ அசோகன், மேயர் சங்கீதா, முன்னாள் எம்எல்ஏ கங்காதரன், திமுக வர்த்தக அணி துணைத் தலைவர் வனராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.