

அதிகாரத்தில் பங்கு கேட்கும் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான வார்த்தைப் போர் முற்றி வரும் நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகையைச் சந்தித்துப் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, “சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகள் மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக் கூடாது, திமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல் வெற்றி பெற வேண்டும்” என வலியுறுத்தினார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்குள் எழுப்பப்படும் ‘ஆட்சியில் பங்கு’ குரல்கள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவதற்கான சூழல் வந்துவிட்டதாக விருதுநகர் காங்கிரஸ் எம்பி-யான மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்தும் வாதப் பிரதிவாதங்களை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, மவுண்ட் ரோடு தர்கா அறங்காவலர் மன்சூர் அலி, ‘ஷியா-சன்னி ஒற்றுமை கூட்டமைப்பு’ தலைவர் சையத் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேற்று சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகையை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். இப்படிப்பட்ட கருத்துகள் மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் ரீதியாக, அரசியல் ரீதியாக ஒவ்வொரு எண்ணம் இருக்கும். ஒவ்வொரு கொள்கை இருக்கும். அது அவர்களுடைய உள் விவகாரம். ஆட்சியில் பங்கு பற்றி எந்தக் கருத்தையும் என்னால் கூற முடியாது. அதற்காக இந்த சந்திப்பு நடைபெறவில்லை.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டியது அவசியம். எங்களை பொறுத்தவரை சர்ச்சைகள் இல்லாமல் இந்த கூட்டணி அடுத்தடுத்த நகர்வுகளுக்குச் செல்லவேண்டும். எந்த ஒரு சச்சரவும், எதிரிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துவிடக் கூடாது. தமிழக மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி செல்வப்பெருந்தகையிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இந்தக் கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு” என்றார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை கூறுகையில், “தமிமுன் அன்சாரி ஆட்சியில் பங்கு குறித்து பேச வரவில்லை. கூட்டணியை பலப்படுத்தவே வலியுறுத்தினார். இதை வைத்து ஆர்எஸ்எஸ் - பாஜக கட்சிகளுக்கு பேசுவதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். அதிகாரப் பகிர்வு குறித்து மாணிக்கம் தாகூர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.
சமீபத்தில் கூட காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘நாங்கள் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை. திமுக-வுடன் மட்டும் தான் கூட்டணி பேசிக்கொண்டிருக்கிறோம். எந்தக் கட்சியால் தான் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியும்... கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள்?’ என்று தான் தெரிவித்தார்.
எதுவாக இருந்தாலும் எங்கள் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தமிழகத்தில் இண்டியா கூட்டணியின் தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தான் பேசி முடிவெடுப்பார்கள். எங்களுக்கு எத்தனை சீட்டுகள் வேண்டும் என்பதை எங்களது கூட்டணிக் கட்சி தலைமையிடம் நாகரிகமாக கேட்டுப் பெறுவோம். தமிழகத்தில் இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதை அசைத்துப் பார்க்க முயற்சிக்கின்றனர். ஆனால் அதுநடக்காது” என்று தெரிவித்தார்.