

தம்பிதுரை |கோப்புப் படம்
திமுகவில் தான் அதிமுக ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவில் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் பலரும் அதிமுக பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் தான். இதில் குறிப்பாக அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துசாமி, செந்தில் பாலாஜி, ரகுபதி, சேகர் பாபு, எ.வ. வேலு இவர்கள் அனைவருமே அதிமுகவிலிருந்து சென்றவர்கள்.
இவர்கள் அங்கு அமைச்சர்களாக உள்ளனர். ஒரு வகையில் பார்த்தால் உண்மையான அதிமுக அங்கே தான் ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவில் அவர்களுக்குத் தேவையான ஆட்கள் இல்லாததால் தான் அதிமுகவில் பயிற்சி பெற்றவர்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பழனிசாமி ஆகியோரின் உண்மையான விசுவாசிகள். இங்கே இருப்பவர்கள் எதற்கும் அஞ்சாமல் அதிமுக வெற்றிக்காக உழைப்பவர்கள். பழனிசாமியின் தலைமையிலான தற்போதைய கூட்டணியே சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும். மற்ற கட்சிகளின் கூட்டணிகள் குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.