

சென்னை: தமிழகத்தில் 2 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. இந்த பார்களை நடத்த டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று தனிநபர்கள் நடத்தி வருகின்றன.
அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு கடைசியாக பார்களுக்கான டெண்டர் விடப்பட்டு, அதன் ஒப்பந்தக் காலம் கடந்த ஆண்டு டிச.31-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, புதிய டெண்டர் விடப்படாமல், ஒப்பந்தக் காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.
அந்த கால நீட்டிப்பும் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் புதிய டெண்டர் உடனடியாக விடப்படாது என்றும், தற்போதை ஒப்பந்தத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2025-ம் ஆண்டுடன் ஒப்பந்தக்காலம் முடிந்த நிலையில் தேர்தல் நடைபெற இருந்ததால் ஒப்பந்தம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. தற்போது நேற்றுடன் நீட்டிப்பு காலமும் முடிவடைந்துள்ளது.
ஆனால் டெண்டர் நடைமுறையில் விதிகளில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் மேலும் 3 மாதம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்களை நவீன மயப்படுத்தவும், பார்கள் அமைந்திருக்கும் இடம், அதில் உள்ள வசதிகளை மேம்படுத்துவது, உணவு வகைகளின் தரம், அந்த தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளை மாற்றி அமைப்பது உள்ளிட்டவை குறித்து புதிய விதிமுறைகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள் ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.