

சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார்.
படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: ‘தமிழ்நாடு வெல்லும்’ என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை - மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வருகை தந்து, வாக்கு செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதல்வருமான உதயநிதி, மருமகள் கிருத்திகா, பேரன் இன்பநிதி ஆகியோர் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
வாக்கு செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “நான் என்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். அதேபோல் தமிழகத்தின் வாக்காளர்கள் எல்லோரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்” என்றார்.
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கு இடையிலான தேர்தல் என தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தனது பரப்புரையில் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் எக்ஸ் பதிவு: “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூக நீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் ஒன்றாக!” என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்.
படம்: எஸ்.சத்தியசீலன்
“எல்லோரும் தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும். நான் கடந்த 25 ஆண்டுகளாக வாக்கு செலுத்தி வருகிறேன். எனது மகன் முதல் முறையாக தனது வாக்கினை செலுத்தி உள்ளார்” என துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகா தெரிவித்தார்.